விருத்தாசலம் அருகே மயானம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரியில் ஆதிதிராவிடர்களுக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்தை அதேப் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் ஆக்கிரமித்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொதுமக்களை சிலர் தாக்கியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியினர் இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலர் கலைச் செல்வன் தலைமையில் சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.