வெவ்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் தொடர்பாக 12 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர்கள் வேம்பு, வினோத்ராஜ் ஆகியோர் திங்கள்கிழமை தனித் தனியாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 7 மாட்டு வண்டிகளில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றதாக 7 பேரை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல ஆவினங்குடி காவல் நிலையத்துக்குள்பட்ட பட்டூரில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றதாக 3 பேரை உதவி ஆய்வாளர் காமராஜ் கைது செய்தார். மேலும் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தார்.
மேலும், ரெட்டிச்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரன், பண்ருட்டி உதவி ஆய்வாளர் அழகிரி ஆகியோர் தங்களது காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தலா ஒரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.