ராமாபுரத்துக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ராமாபுரம் (மே) அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.பஞ்சமூர்த்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலூர் வட்டம், மேற்கு ராமாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பல்வேறு ஊர்களிலிருந்து வரும் மாணவ, மாணவிகள் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில் போதுமான பேருந்துகள் இல்லாததால் காத்திருந்து தனியார் பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அரசால் வழங்கப்பட்டுள்ள பேருந்து பயண அட்டையை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது.
எனவே இந்தப் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக கடலூரிலிருந்து புறப்பட்டு வண்டிப்பாளையம், வடுகப்பாளையம், கேப்பர்மலை, குறிஞ்சிநகர், எஸ்.புதூர், வடக்கு காலனி, சமத்துவபுரம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், ஏரிக்கரை வழியாக ராமாபுரம் செல்லும் வகையிலும், மேலும் பண்ருட்டியிலிருந்து ராமாபுரம் வரும் வகையிலும் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். இதில் கடலூரிலிருந்து ராமாபுரத்துக்கு மேற்கண்ட பாதையில் ஏற்கெனவே பேருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.