சிதம்பரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மூத்த வணிக மேலாளர் அருண்தாமஸ் ஆய்வு மேற்கொண்டார்.
புதுதில்லியில் ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு வாரியக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக பிரசார அணி செயலர் வே.ராஜரத்தினம், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள், குறைபாடுகள் குறித்து வாரிய உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சார்யாவிடம் முறையிட்டதன் பேரில், குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசீர்வாதம் ஆச்சார்யா அறிவுறுத்தலின்படி, திருச்சி கோட்ட மூத்த வணிக மேலாளர் அருண்தாமஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்து, உயர்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பாஜக பிரசார அணி செயலர் வே.ராஜரத்தினம், இயக்குதல் பிரிவு மேலாளர் மணிவண்ணன், நிதி நிர்வாக அலுவலர் செல்வம், ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் உ.வெங்கடேச தீட்சிதர், நிலைய அலுவலர் முரளி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து மூத்த வணிக மேலாளர் அருண்தாமஸ் கூறியதாவது: சிதம்பரம் ரயில் நிலையத்தில் நீண்ட கால பிரச்னையான குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மாநில அரசுடன் பேசவும், ரயில்வே தகவல் மையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் முதியோர்களின் சிரமத்தைக் குறைக்க எக்ஸ்லேட்டர் வசதி ஏற்படுத்த ரயில்வே துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களும் மேம்பாடு அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.