பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பு சார்பில், பெரியகாட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பைசல் ரசீது வழங்க வேண்டும், பைசல் ரசீது வழங்க பணம் கேட்கக் கூடாது, பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி புதிதாகப் பயிர்க் கடன் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தனி நபர், கறவை மாடு, பால் பண்ணை, பைப் லைன் போர் இதர கடன் சம்பந்தப்பட்ட விபரங்களை விளம்பரப்படுத்த வேண்டும், மகளிர் சுய உதவி குழுக்கள் கேட்டுள்ள கடனை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பினர் பெரியகாட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜய் ஆனந்த் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், புதிதாகப் பயிர்க் கடன்களைப் படிப்படியாக வழங்குவது, கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படும் கடன் குறித்து விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுப்பது, ஏப்ரல் மாதத்தில் 20 நபர்களுக்கு கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கச் செயலர் சதாசிவம், முன்னாள் தலைவர் கே.வைத்தியநாதன், மக்கள் பாதுகாப்புக் கவசம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, அமைப்புக் குழு வி.சேதுராஜன், கே.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.