மறைந்த அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் 95-ஆவது பிறந்த நாள் விழா, வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நா.மகாலிங்கம் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடலூர், சுத்த சன்மார்க்க நிலையத்தின் துணைத் தலைவர் ஊரன் அடிகளார் தலைமை வகித்தார். ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலையத்தின் பொருளாளர் ஆசைதம்பி, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், ராஜா வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (மனித வளம்) ஆர்.விக்ரமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தைத் திறந்து வைத்து, மாலை அணிவித்துப் பேசினார். பின்னர், கல்லூரி, பல்கலை. அளவில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கும், விளையாட்டுப் போட்டிகளில் தேசிய, மாநில அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்வில், "வழிகாட்டும் வரலாறு' என்ற பிறந்த நாள் விழா மலரை என்எல்சி இயக்குநர் ஆர்.விக்ரமன் வெளியிட, முதல் பிரதியை சுத்த சன்மார்க்க நிலையத்தின் துணைத் தலைவர் ஊரன் அடிகள் பெற்றுக் கொண்டார்.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இளங்கோ, மாணிக்கம், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் நிர்வாக அலுவலர் லதா ராஜா வெங்கடேசன் நன்றி கூறினார்.