உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிக ரீதியில் மேம்பாடு அடைவதற்கான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நபார்டு வங்கி உதவியுடன் 3 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பதிவு பெற்று பணிகளைத் தொடங்கியுள்ளன. மேலும் ஒரு நிறுவனம் பதிவு பெற விண்ணப்பித்துள்ளது. தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மூலம் 2 உற்பத்தியாளர் நிறுவனங்களும், சுயநிதி ஏற்பாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. ஆய்வின் போது ஆட்சியர் பேசியதாவது: விவசாயிகள் தங்களது பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்களை வணிக ரீதியில் விற்கவும், இடைத் தரகர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையினர் அளிக்க ஏற்பாடு செய்யவார்கள்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்த அடிப்படை புள்ளி விவரத் தொகுப்பு ஏற்படுத்தப்படும். விவசாயத் துறை, தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சமுதாய, பொருளாதார மாற்றத்துக்கான காரணிகளாக செயல்பட வேண்டுமென்ற நோக்கில் அனைத்து உதவிகளும் சம்பந்தப்பட்ட துறை மூலம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களுடைய புதிய உத்திகளை வணிக ரீதியில் செயல்படுத்தத் தேவையான தொழில்நுட்ப மற்றும் வங்கிக் கடன் உதவிக்கு அரசு விதிகளின்படி ஏற்பாடு செய்யப்படும். நிறுவனங்களின் செயல்பாடு குறித்து மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் சங்கர், வேளாண் இணை இயக்குநர் ந.கனகசபை, தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி, வேளாண் விற்பனை துணை இயக்குநர் பொ.ஜெயக்குமார் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.