மாணவ, மாணவிகள் தங்களது மனக் குழப்பத்தை போக்குவதற்கு "104' என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கருத்துகளைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஏற்படும் மனக் குழப்பத்தைப் போக்கவும், மேல்நிலைக் கல்வி தொடர்பாக அறிந்து கொள்ளும் வகையிலும் "104' என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பிளஸ்-2 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகள் குறித்த மனக் குழப்பத்திலிருந்து விடுபட ஆலோசனை மையத்தை அணுகலாம்.
இதற்காக ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாவட்டத்தில் 400 பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சியானது, பொதுத்தேர்வுக்கு முன்பே அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்பட்டது.
மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை 04142-221080, 9094681190 என்ற எண்களிலும், சிநேகா ஆலோசனை மையத்தை 044-24640050 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறலாம். ஆலோசனை பெறுபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.