கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஹெல்பேஜ் இந்தியா, வரக்கால்பட்டு மூத்த குடிமக்கள் அமைப்பு ஆகியவை இணைந்து முதியோர்களுக்கான சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கை கடலூர் வரக்கால்பட்டில் அண்மையில் நடத்தின.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி என்.சுந்தரம் தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்ற நீதிபதி ஜி.குமணன் முன்னிலை வகித்தார். முதியோர் பாதுகாப்புச் சட்டங்கள், அவர்களது உரிமைகள் குறித்து நீதிபதிகள் விளக்கினர். மேலும் முதியோர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது, சட்டத்தை அணுகி எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.
ஹெல்பேஜ் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால்ராமலிங்கம், வழக்குரைஞர் எஸ்.வீரமணி ஆகியோர் முறையே முதியோர்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டம் குறித்தும் விளக்கமளித்து பேசினர்.
மூத்த குடிமக்கள் அமைப்பு நிர்வாகிகள் ஆர்.சுப்ரமணியன், ஜெ.மனோகரன், சட்ட இணைத் தொண்டர்கள் ஆர்.சண்முகம், ஜி.காமாட்சி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக ஹெல்பேஜ் இந்தியா ஒருங்கிணைப்பாளர்
ஆர்.தயாநிதி வரவேற்க, மூத்த குடிமக்கள் அமைப்பு தலைவர் ஜி.நடராஜன் நன்றி கூறினார்.