கடலூர் மாவட்டம், வடலூரில் திமுக நிர்வாகி புதன்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்.
வடலூர் ஓபிஆர் பிளாட் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (44). வடலூர் பேரூராட்சி, 17-ஆவது வார்டு திமுக செயலரான இவர், வடலூரில் உணவகமும், நெய்வேலி சாலையில் மதுபானக் கூடமும் நடத்தி வந்தார்.
மதுபானக் கூடம் நடத்துவதற்காக ரவிச்சந்திரன் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்து வந்தாராம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நெடுஞ்சாலைகள் ஓரமிருந்த மதுக் கடைகள் மூடப்பட்ட போதும், ரவிச்சந்திரன் தனது மதுக் கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டல் விடுத்ததாம். ஆனால், ரவிச்சந்திரன் கொடுக்க மறுத்துவிட்டாராம்.
நெய்வேலி சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு புதன்கிழமை இரவு சென்ற ரவிச்சந்திரன் மாத்திரைகள் வாங்கி விட்டு, அந்தப் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பர் அருண்குமாரையும் அந்தக் கும்பல் வெட்டியது. பின்னர், அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ரவிச்சந்திரனை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், நெய்வேலி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
காயமடைந்த அருண்குமார் புதுச்சேரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். அவர் போலீஸில் அளித்த புகாரில், வடலூரைச் சேர்ந்த அருண் என்ற அருண்பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வடலூர் போலீஸார் அருண்பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து, தனிப் படை அமைத்து தேடி வருகின்றனர்.