கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2,671 பேர் பல்வேறு பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றனர். தமிழைக் காட்டிலும் ஆங்கிலப் பாடத்தில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வை 36,835
மாணவ, மணவிகள் எழுதினர். இவர்களில் 2,671 பேர் பல்வேறு பாடங்களில் முழு மதிப்பெண்ணான 100 மதிப்பெண்களைப் பெற்றனர். எனினும் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களில் யாரும் முழு மதிப்பெண்கள் பெறவில்லை. அதே நேரத்தில் கணிதத்தில் 381 பேரும், அறிவியலில் 589 பேரும், அதிகபட்சமாக சமூக அறிவியலில் 1,801 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றனர்.
கடலூர் கல்வி மாவட்ட அளவில் 1,920 பேர் பாடங்களில் முழு மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களில் கணிதத்தில் 300 பேர், அறிவியலில் 338 பேர், சமூக அறிவியல் 1,282 பேர்களாவர்.
விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் 851 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றனர். இவர்களில் கணிதத்தில் 81 பேர், அறிவியலில் 251 பேர், சமூக அறிவியல் 519 பேர்களாவர்.
பாடங்கள் வாரியாக தமிழ் பாடத்தில் 93.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதனைவிட கூடுதலாக ஆங்கிலப் பாடத்தில் 93.92 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றனர். அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 98.53 சதவீதத்தினரும், சமூக அறிவியலில் 96.05 சதவீதத்தினரும், குறைந்த அளவாக கணிதத்தில் 92.19 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றனர். அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 0.94 சதவீதத்திலிருந்து 4.49 சதவீதம் வரை அதிகமாக இருந்தது.