சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் சாவு: மர்மம் இருப்பதாக ஆட்சியரிடம் புகார்

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் அண்மையில் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.

சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சிங்கப்பூரில் அண்மையில் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
 சிதம்பரம் வட்டம், கண்ணங்குடியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ஜோதிகிருஷ்ணன் (39). பிளஸ்-2 படித்த இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த 40 நாள்களுக்கு முன்பாக சிங்கப்பூரில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணியில் சேர்ந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி ஜோதிகிருஷ்ணன் மனைவி மகேஸ்வரியை சிங்கப்பூரிலிருந்து அவரது உறவினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, ஜோதிகிருஷ்ணன் கடந்த 15-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அதற்கான காரணத்தை நிர்வாகத்தினர் கூற மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து அவரது உறவினர்கள் ஜோதிகிருஷ்ணன் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள முயன்றும் முடியவில்லை. எனினும் அவரது சடலத்தை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில் ஜோதிகிருஷ்ணனின் சகோதரர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஜோதிகிருஷ்ணனின் இறப்பு தொடர்பாக அங்கிருந்தவர்கள் சில புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். அதில் பல சந்தேகங்கள் உள்ளது. எனவே அவரது இறப்புக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். மேலும், அவரது சடலம் இந்தியா கொண்டுவரப்பட்ட பின்னர் சிதம்பரத்தில் உடற்கூராய்வு செய்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர்.
 இதனையடுத்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com