கடலூரில் வடிகால் வாய்க்கால்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டுமென நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவ மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி கடலூர் முதுநகர் ஏணிக்காரன்தோட்டம், குட்டைக்காரன் தெரு, அக்கரைக்கோரி, வண்டிப்பாளையம் சாலை, தாமரை நகர், பால்வாடி தெரு, குப்பங்குளம், புருஷோத்தமன் நகர், கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது குட்டைக்காரன் தெருவில் மழைநீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகளை முழுவதுமாக அகற்றுவதோடு, வடிகாலை அகலப்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மேற்காணும் இடங்களில் மழைநீர் தடையின்றி செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரானது வடிகால் வாய்க்காலுக்குச் சென்றடையும் வகையில் வழிவகை செய்யவேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது சார்- ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், கடலூர் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான், நகராட்சி பொறியாளர் ராமசாமி, இளநிலைப் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் தங்கதுரை, கடலூர் வட்டாட்சியர் ப.பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதி ஆகியோர் உடனிருந்தனர்.