குறிஞ்சிப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பசுந்தாள் உரம் பயிர் குறித்த தொழில்நுட்பக் கையேடு வழங்கும் விழா அயன் குறிஞ்சிப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன், பேராசிரியர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடுகளை வழங்கினர்.
சன்னரகம்-51 (பொன்னிக்கு மாற்று) விதை நெல் முழு மானியத்தில் ரெட்டிப்பாளையம், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, குவப்பன்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விவசாயிகள் நடவு செய்துள்ள விளை நிலத்தை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பின்னர், மணிலா, உளுந்து விதை நேர்த்திக்காக முழு மானியத்தில் அசோஸ்பைரிலம், ரைசோபியம் ஆகியவற்றை வழங்கினர். மேம்படுத்தப்பட்ட விருத்தாசலம் 8 என்ற மணிலா ரகத்தை பயிரிட 40 விவசாயிகளுக்கு தலா 40 கிலோ வீதம் 1,600 கிலோ விதை மணிலாவை வழங்கினர்.
நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி உதவி வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி, உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம், முன்னோடி விவசாயிகள் செல்வம், ராமநாதன், கருணாகரன், ராஜா, குப்புசாமி உள்ளிடோர் பங்கேற்றனர்.