கடலூர் மாவட்டத்திலுள்ள அரிய வகை நூல்கள், ஓலைச் சுவடிகள் உள்ளிட்டவைகளை மாவட்ட நூலகத்துக்கு வழங்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரிய வகை நூல்கள், ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றை பொதுமக்கள், தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று பாதுகாத்து பயன்படுத்த தமிழக அரசு, அரியவகை நூல்கள், ஆவணங்களை கொடையாக பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்டத்திலுள்ள அரியவகை நூல்கள், ஆவணங்கள், ஓலைச் சுவடிகளை சேகரித்து, கடலூர் மாவட்ட நூலக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென நூலக பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக நமது பழைமைவாய்ந்த நூல்கள் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும்.
எனவே, பொதுமக்கள், தனியார் அமைப்புகள் தங்களிடமுள்ள நூல்கள், ஆவணங்கள், ஓலைச் சுவடிகளை தங்கள் பகுதியிலுள்ள பொது நூலகங்களில் வழங்கலாம். அதனை அசலாக வழங்க விரும்பாதவர்கள் நகல் எடுத்தும் வழங்கலாம். அதிக அளவில் அரியவகை பொருள்களை ஒப்படைக்கும் நபர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்படும்.
எனவே, நமது நாட்டின் பெருமைகளை எடுத்துக்கூரும் பொருள்களை அடுத்தத் தலைமுறைக்கும் எடுத்துச் சென்று ஆவணப்படுத்தும் வகையிலான இந்த முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.