வடலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை எரிவாயு உருளை வெடித்ததில், அன்னதானக் கூடம் எரிந்து சேதமடைந்தது.
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில், மதுரையைச் சேர்ந்த நந்தி சரவணன் என்பவர் அன்னதானக் கூடம் நடத்தி வருகிறார். இங்கு திங்கள்கிழமை அதிகாலை பலத்த வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. அன்னதானக் கூடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து. அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். அவர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
பின்னர், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம்.மகாலிங்கமூர்த்தி தலைமையில், நிலைய அலுவலர்கள் எஸ்.மணிவேலு(குறிஞ்சிப்பாடி), ராஜராஜசோழன்(சேத்தியாதோப்பு) ஆகியோர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில், அன்னதானக் கூடத்திலிருந்த பொருள்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சமையல் செய்தபின் எரிவாயு அடுப்பை அணைக்காமல் விட்டதும், இதனால், எரிவாயு உருளை வெடித்ததுமே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.