பண்ருட்டி அருகே மொபெட் மீது தனியார் பேருந்து மோதியதில், தையல்
தொழிலாளி உயிரிழந்தார்.
பண்ருட்டியில், பழைய கடலூர் பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). தையல் தொழிலாளியான இவர், திங்கள்கிழமை இரவு கடலூர் சாலையில் ரயில்வே காலனி அருகே தனது மொபெட்டில் பண்ருட்டி நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த தனியார் பேருந்து மொபெட் மீது மோதியதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தனியார் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், பேருந்தின் கண்ணாடி சேதமடைந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தார். பின்னர், தேவராஜின் சடலத்தைக் கைபற்றி உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.