ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. பொதுச் செயலர் பாபு.சுப்ரமணியன் சென்ற மாத கூட்ட அறிக்கையும், பொருளாளர் ர.திருநாவுக்கரசு வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர்.
கூட்டத்தில், ஓய்வூதியர்களின் மருத்துவப் படியை மத்திய அரசு ரூ.ஆயிரமாக உயர்த்தியதைப் போல தமிழக அரசும் உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவில் ஊதிய மாற்றம் செய்து, பணப் பயனை வழங்கியதைப் போல மாநில அரசும் தனது 8-ஆவது ஊதியக்குழுவில் உரிய மாற்றம் செய்து பணப் பயனை 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.செயராமன், ஆர்.திருநாராயணன், எஸ்.அன்பழகன், வி.ரங்கநாதன், ஆர்.தனராஜ், ஆர்.ஜோதி, ஏ.பேட்ரிக், பி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக நிர்வாகி எம்.தண்டபாணி வரவேற்றார். துணைச் செயலர் ஆர்.செந்தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.