கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படிசெவ்வாய்க்கிழமை கடலூர் வண்டிப்பாளையத்திலுள்ள துர்கா நர்சரி பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பாரதிதாசன் இலக்கிய மன்றத் தலைவர் கடல்நாகராஜன் தலைமை வகித்தார். நேரு உருவப் படத்துக்கு கல்லூரி முதல்வர் செந்தில்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, பாட்டு, மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜி.ஆறுமுகம் பரிசுகளை வழங்கினார். நல்லாசிரியர் விருதாளர் இஸ்ரவேல், பேராசிரியர் அர்த்தநாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பள்ளித் தாளாளர் சங்கீதா வரவேற்றார். ஆசிரியை ஷோபனா நன்றி கூறினார். பண்ருட்டி ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளித் தாளாளர்
எம்.நடராசன் தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.குமார் தலைமை வகித்தார். மாணவி சௌமியா வரவேற்றார். பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி வாழ்த்துரையாற்றினார். கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் சிறப்புரையாற்றினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி ஹர்வர்ஷினி நன்றி கூறினார்.
சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள ஜி.எம்.தொடக்கப் பள்ளியில், யாச் பொறுப்பாட்சி தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஜி.எம்.ரவி வாண்டையார் தலைமை வகித்துப் பேசினார். தொண்டு நிறுவன தலைமை நிர்வாகி காஞ்சனா, செயலர் துளசிராஜ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினர். தலைமை ஆசிரியை மொகந்தா நன்றி கூறினார்.