விடுதிகளில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 33 பள்ளி, கல்லூரி ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தலா ஒருவர் வீதம் தொகுப்பு ஊதியத்தில் துப்புரவாளராகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் தொகுப்பு ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் ரூ.ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு முதல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் தான் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஊதியமும் மிகவும் தாமதமாக 3, 5 மாதங்கள் வழங்கப்பட்டு வருகிறதாம்.
எனவே, குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று துப்புரவுப் பணியாளர்கள் திரளானோர் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.