திட்டக்குடி பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மேலும் 3 பேரை தனிப் படையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திட்டக்குடி, வேப்பூர், சிறுப்பாக்கம், நெய்வேலி பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து, 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில், கண்காணிப்பு கேமரா உதவியுடன் சிலர் அடையாளம் காணப்பட்டனர். அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 வழக்குகள் தொடர்பாக 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் 3 பேரை தேடும் பணியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் செவ்வாய்க்கிழமை திட்டக்குடி காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தொடர் வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர்களான வேப்பூரை அடுத்த அரியநாச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர் (எ) ஆணி சங்கர் (28), புதுச்சேரி பூர்ணாக்குப்பத்தைச் சேர்ந்தவர்களான கெüதமன் (19), ரவிக்குமார் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மொத்தம் 10 பேரிடமிருந்து 50 பவுன் நகைகள், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமான நபர்களின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றார் அவர். திட்டக்குடி துணைக் கண்காணிப்பாளர் ரா.பாண்டியன் உடனிருந்தார்.