மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி பொறுப்பாளர் ஜெகரட்சகன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.குமார், இணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.குருராமலிங்கம், எம்.சுப்புராயன், து.துரைவேலு, கே.ரவி, கே.சிவாஜிகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கடலூரில் படை வீரர் மாளிகை சாலை, நத்தவெளி இணைப்புச் சாலை பணிகளை துரிதமாக முடித்து ஒரு மாதத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவது. மஞ்சக்குப்பம் நேதாஜி சாலைப் பணியை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை நாடுவது. ஆணைக்குப்பம் பின்புறமுள்ள பழமலைநகருக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பேருந்தில் ஆண்கள், பெண்கள் தனித் தனி வாசல்களில் ஏறி, இறங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்குப் பருவ மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் பழுதுநீக்க வேண்டும். நகரின் பல்வேறுப் பகுதிகளில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிப்பது. நகரில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் சண்முகம், தாஸ், அர்த்தநாரி, க.தர்மராஜ், மு.கார்த்திகேயன், எஸ்.சையதுமுஸ்தபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.