திட்டக்குடி பேரூராட்சியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ சி.வெ.கணேசன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்ற எம்எல்ஏ கணேசன், செயல் அலுவலர் குணசேகரனிடம் பேரூராட்சி முழுவதும் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளவா, டெங்குவை ஒழிக்க கொசு மருந்து தெளிக்கப்பட்டதா, கோழியூரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயங்காததன் காரணம் என்ன என்று கேள்விகளை எழுப்பினார்.
உடனடியாக சுகாதாரப் பணிகளில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தினார்.
அப்போது, திட்டக்குடி நகர திமுக செயலர் பரமகுரு, ஒன்றியச் செயலர் பட்டூர் அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் எட்வின் விஜயகுமார், சேதுராமன், வெற்றி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.