கடலூர் மாவட்டத்தில் 348 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அமைக்கப்படும் பட்டாசு கடைகள் அனைத்தும் அரசின் உரிய அனுமதி பெற்றே அமைக்கப்பட வேண்டுமென விதிமுறை உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை 348 பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை அலுவலர் மகாலிங்கமூர்த்தி கூறினார்.
கடந்த ஆண்டில் 400 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பட்டாசு கடைகளில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான தீயணைப்புக் கருவிகளை வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 215 தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்களும், 17 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.