காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, மறைந்த காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் மலர் வளையம் வைத்து சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
லடாக் பகுதியில் சீன ராணுவம் 1959-ஆம் ஆண்டில் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படை காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான ஓராண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 370 காவலர்கள் பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அங்குள்ள நினைவுத் தூணில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, காவலர்களின் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. அப்போது, 22 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வேதரத்தினம், மத்திய சிறைக் கண்காணிப்பாளர் த.பழனி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கம், ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஆர்.சுரேந்திரகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் க.நரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.