பண்ருட்டி பகுதியில் உள்ள ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பசுமை நண்பர்கள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் அண்மையில் மனு அளித்தனர்.
அந்த அமைப்பைச் சேர்ந்த கே.பாலு, ஆர்.காளிதாஸ் ஆகியோர் அளித்த மனுவின் விவரம்: பண்ருட்டி நகரில் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள களத்துமேடு ஏரி, திருவதிகையில் செட்டிப்பட்டரை ஏரி ஆகியவை தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் இந்த நிலை தொடர்கிறது. இதனால், ஏரிகளைத் தூர்வாரவோ, ஆழப்படுத்தவோ முடியவில்லை. மேலும், ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. எனவே, மேற்கண்ட ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.