கடலூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், வெள்ளிக்கிழமை மதியம் போராட்டத்தை ஒத்திவைத்து கலைந்துச் சென்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கடந்த 7-ஆம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது.
கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் எதிரே கூட்டமைப்பினர் புதன்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அங்கேயே சமையல் செய்தும், இரவில் அங்கேயே தங்கியிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக ஆட்சியரின் பழைய அலுவலகம் எதிரே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமைமதியத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.
இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலருமான எல்.அரிகிருஷ்ணன் கூறுகையில், இந்தப் போராட்டம் குறித்து நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வரும் 21-ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பிடமிருந்து பதில் பெற்றுத்தர நீதிமன்றம் உறுதியளித்துள்ளது. இதனை ஏற்று வரும் 21-ஆம் தேதி வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்.
நீதிமன்றத்தில் அரசு அளிக்கும் உத்தரவாதத்தைப் பொறுத்து அடுத்தக்கட்ட முடிவுகளை எடுப்போம் என்றார்.