கடலூர் மாவட்ட கபடி அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில 44-வது ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் மாவட்டம், சங்ககிரியில் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கான கபடிப் போட்டிகள் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டம், நாட்ரம்பள்ளியில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் கடலூர் மாவட்ட கபடி அணிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரி கபடி குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் 220 பேரும், மாணவிகள் 75 பேரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அலுவலர் மா.ராஜா தேர்வை தொடக்கி வைத்தார்.
கபடி கழகத்தின் மாவட்டத் தலைவர் வேலவன், மாவட்டச் செயலர் டி.நடராஜன், பொருளாளர் மணிபாலன், தேசிய கபடி வீரர்கள் ஞானமுருகன், நவநீதராமன், கதிரவன் மற்றும் பயிற்சியாளர்கள் வீரர்களை தேர்வு செய்தனர்.
இதில், கடலூர் மாவட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவுக்கு 14 பேரும், பெண்கள் பிரிவுக்கு 14 பேரும் தேர்வு செய்யப்பட்டனர் என மாவட்ட கபடிக் கழகம் அறிவித்துள்ளது.