கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அமல்படுத்தப்படும் பசுமை கடலூர் திட்டத்தை மாநில தொழில் துறை அமைச்சர்
எம்.சி.சம்பத் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
பசுமை கடலூர் திட்டத்தின் தொடக்க விழா ஆலோசனைக் கூட்டம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது: கடலூரை பசுமைப் பகுதியாக உருவாக்க முதல்கட்டமாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரக் கன்றுகள் நடப்படும். அடுத்த கட்டமாக கடலூர் மற்றும் இதரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களின் உதவியுடன், அந்தந்தப் பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட உள்ளன.
தொடர்ந்து மூன்றாம் கட்டமாக கிராமப்புற பகுதிகளிலும், இதர சாலை ஓரங்களிலும் மரக் கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வடலூரில் தூர்வாரப்பட்ட 3 ஏரிகளிலும், வடலூர் சபையிலும் மரக் கன்றுகள் நடப்படும். இதற்கான மரக் கன்றுகளை கரூர் டிஎன்பிஎல் நிறுவனம் இலவசமாக அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பான சுற்றுச்சுவர் வசதி உள்ளதால் அந்தப் பகுதிகளில் நிர்வாகத்தின் உதவியுடன் முதல் கட்டமாக மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கடலூர் வளர்ச்சி கவுன்சில், கடலூர் அனைத்துக் குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை செயல்படுத்த உள்ளன என்றார் அமைச்சர்.
கூட்டத்துக்குப் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக் கன்று நட்டு பசுமை கடலூர் திட்டத்தை அமைச்சர் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஆர்.எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.