காஷ்மீர் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்து, கடலூரில் தமுமுகவினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம் ரசானா கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமுமுக மாவட்டத் தலைவர் வி.எம்.ஷேக்தாவூத் தலைமை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் திருச்சி ஷரிப், தமுமுக மாவட்டச் செயலர் எஸ்.ஜாகீர் உசேன், மமக மாவட்டச் செயலர் ஏ.எச்.தமீம்அன்சாரி ஆகியோர் பேசினர். முன்னதாக தமுமுக மாவட்ட பொருளாளர் எஸ்.ஹசன்முஹம்மது வரவேற்றார். நகரத் தலைவர் ஐ.நசுருதீன் நன்றி கூறினார்.
இடதுசாரிகள்....
அதேபோல, இடதுசாரிகள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் நகரச் செயலர் டி.எஸ்.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், நகரச் செயலர் ஆர்.அமர்நாத், செயற்குழு உறுப்பினர் ஜி.ரமேஷ்பாபு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பால்கி உள்ளிட்டோர் உரையாற்றினர்.