பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில், அமாவாசை வழிபாடு மாதந்தோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி, சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, சென்னை - திருவல்லிக்கேணி கோயில் பார்த்தசாரதி அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் அருள் பாலித்தார். ஹேமாம்புஜவள்ளி தாயார் வெள்ளி அங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதேபோல, பண்ருட்டி வரதராஜப் பெருமாள், திருவதிகை அரங்கநாதப் பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.