கடலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரத்தில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
தென்பெண்ணை ஆற்றில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உள்பட்ட விஸ்வநாதபுரத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணி நடைபெற்று வரும் நிலையில், மணல் குவாரிக்கு அந்தப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மணல் குவாரி அமைய உள்ள இடத்தில் தடுப்பணை கட்ட ஏற்கெனவே அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மணல் அள்ளினால் தடுப்பணை கட்ட முடியாத நிலை ஏற்படும்.
மேலும், இரு கரைகளிலும் உள்ள சுமார் 50 கிராமங்கள் இந்த ஆற்று நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றன. குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது மணல் அள்ளப்பட்டால் குடிநீர் ஆதாரம், விவசாயப் பணிகள் பாதிக்கும் என்பதால், மணல் குவாரி அமைக்கக் கூடாதென மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
மேலும், குவாரி தொடர்பான பணிகளை ஆய்வு செய்ய வந்த ஆட்சியரையும் முற்றுகையிட்டனர். எனவே, விஸ்வநாதபுரம் பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நிலத்தடி நீரைச் சேமிக்க இந்தப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். விஸ்வநாதபுரம், கலிஞ்சிக்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்ட மக்கள், இளைஞர்கள் கையொப்பமிட்டு, மணல் குவாரிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.