கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபட கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தக் கூடாதென தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:
தமிழக அரசால் கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் என்ற பெயரில் வரைபடங்களை வெளியிட்டு, மாவட்ட வாரியாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றது. அதன்படி, கடலூர் மாவட்டத்துக்கான கூட்டம் ஏப்ரல் 18- ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அரசால் வெளியிடப்பட்ட வரைவு கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடங்கள் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, மீனவக் கிராமங்கள், மீனவ கிராமங்களின் பொதுச் சொத்துகள், அவர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்கள் ஆகியவை சர்வே எண்ணுடன் அமைக்கப்படவில்லை.
மத்திய அரசால் 1990- ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் உருவாக்கப்படவில்லை. சட்டத்துக்கு ஒவ்வாத வரைபடங்களை மட்டும் வைத்து கருத்துக் கேட்பது அரசின் அறிவிப்பாணைகளுக்கு எதிரானதாகும்.
இந்த வரைபடத்தைக் கொண்டு கருத்துக் கூறுவது என்பது சரியானதாக இருக்காது. எனவே, ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.