ஆடி அமாவாசையையொட்டி கடலூர் வெள்ளிக் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தாய், தந்தையர், முன்னோர்களை இழந்தோர் அவர்களை நினைத்து அமாவாசை நாள்களில் விரதம் கடைப்பிடிப்பர். அதிலும் தை, ஆடி மாதங்களில் கடைப்பிடிக்கப்படும் அமாவாசை விரதம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
அன்றைய நாளில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களது ஆத்மாவை சாந்திப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை வந்த ஆடி அமாவாசையை சிறப்பான நாளாகக் கருதி முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் சிறப்பு பூஜை செய்து படையலிட்டு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் வெள்ளிக் கடற்கரையில் காலை முதல் பொதுமக்கள் திரளானோர் வந்திருந்து தர்ப்பணம் செய்தனர்.
கடலில் குளித்து, படையலிட்டு வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பணம் செய்தனர். பின்னர், கால்நடைகளுக்கு அகத்தி கீரை வழங்கினர்.