என்எல்சி கூட்டுறவு நாணயச் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

நெய்வேலி என்எல்சி பணியாளர்கள் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


நெய்வேலி என்எல்சி பணியாளர்கள் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தச் சங்கத்தின் புதிய இயக்குநர்கள் தேர்வுக்கான தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் சிஐடியூ, தொமுச, அதொமுச உள்ளிட்ட தொழில்சங்கங்களைச் சேர்ந்த 41 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. இதில், சிஐடியூ சங்கத்தைச் சேர்ந்த 8 பேரும், தொமுச சங்கத்தைச் சேர்ந்த 3 பேரும் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதன்மூலம் 3-ஆவது முறையாக சிஐடியூ சங்கம் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளது.
இதற்கான பதவியேற்பு விழா மெயின் பஜாரில் உள்ள சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டுறவுச் சங்கச் செயலர் நடனசேகர் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் 12-ஆவது தலைவராக ஆர்.இந்திரா, துணைத் தலைவராக பி.மணிமாறன், இயக்குநர்களாக ஆர்.தாமோதரன், அ.ஆரோக்கியதாஸ், எஸ்.கார்த்திகேயன், எம்.அன்பழகன், என்.வீராசாமி, க.அண்ணாதுரை, ஆர்.ரேவதி, எஸ்.கவிதா, ஆர்.லட்சுமணன் ஆகியோரை தேர்தல் அதிகாரி பத்மநாபன் முறைப்படி அறிவித்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.மீனாட்சிநாதன் வாழ்த்திப் பேசியதாவது: 1968-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தக் கூட்டுறவுச் சங்கம் கடந்த ஆண்டு ரூ.850 கோடிக்கு பணப் பரிமாற்றம் செய்து மாநிலத்தில் முதன்மை சங்கங்களின் பட்டியலில் உயர்ந்துள்ளது. இதனை மேலும் உயர்த்தி உறுப்பினர்களுக்கான சேவையை தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சிஐடியூ சங்கத் தலைவர் அ.வேல்முருகன், பொதுச் செயலர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன், அலுவலகச் செயலர் குப்புசாமி, வருங்கால வைப்பு நிதி காப்பக இயக்குநர்கள் கே.மணி, ஆர்.மணி, சதீஷ், பி.அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலாளர் முத்து நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com