சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் நடத்தும் நாட்டியாஞ்சலி விழாவும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நடத்தும் நாட்டியாஞ்சலி விழாவும் செவ்வாய்க்கிழமை (பிப்.13) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவானது டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்களை ஓர் குழுவாக அமைத்து 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்த நாட்டியாஞ்சலி விழா கடந்த 33 ஆண்டுகளாக அறக்கட்டளை மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்தது.
நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் நாட்டியஞ்சலி நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொது தீட்சிதர்களே நடத்த முடிவு செய்து, கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதனால், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் சிதம்பரம் தெற்குரத வீதியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் (வி.எஸ்.டிரஸ்ட் இடத்தில்) நாட்டியாஞ்சலி விழாவை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்கள் நடத்தும் நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியை நடராஜர் கோயிலில் பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியன் தொடக்கி வைக்கிறார்.
பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்னரிவால் புரோகித் பங்கேற்று நிறைவுரையாற்றுகிறார். அதே போல,நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.
இந்த நாட்டியாஞ்சலி விழாவை சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் காமகோடி தொடக்கி வைக்கிறார்.