திருப்பூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண் செவிலியர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டியை அடுத்துள்ள சின்னநரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் மணிமாலா (24). இவர், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வந்தார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மணிமாலா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பண்ருட்டியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்து, அவர்கள் வெள்ளக்கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், மணிமாலா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு இரண்டு மருத்துவர்கள் காரணமாக இருக்கலாம் என்றும் கூறிய அவரது உறவினர்கள்,, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
இந்த நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள், ஊழியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் மணிமாலாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரின் சாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மணிமாலாவின் உறவினர்கள் சுமார் 300 பேர் திரண்டு வந்து, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பண்ருட்டி-பாலூர்-கடலூர் சாலையில் நரிமேடு பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார் (படம்).மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.