கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில், இயற்கை வேளாண்மை என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்து, இயற்கை வேளாண்மை குறித்து விளக்கிப் பேசினார். அவர் கூறியதாவது: பன்னாட்டு நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வேலைப்பார்த்து வருவோர், தற்போது இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்பியுள்ளனர். எனவே, மாணவர்கள் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு அதை செயல்படுத்த வேண்டும். இதன் மூலமாக வருங்காலத்தில் மாணவர்கள் சிறந்த இயற்கை விவசாயிகளாக மாறுவதுடன், அதிக வருமானமும் ஈட்டலாம் என்றார்.
கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள் ஆகியவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும், கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக தாவரவியல் துறைத் தலைவர் கீதாதேவி வரவேற்க, பேராசிரியர் கே.நிர்மல்குமார் அறிமுக உரையும், பேராசிரியர் ம.பாக்கியலட்சுமி நன்றியும் கூறினர்.