நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், சாரணர் இயக்க சிந்தனை நாள் விழா, வட்டம் 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவுலின் பிறந்த தினமான பிப்.22-ஆம் தேதி, சாரணர் இயக்கச் சிந்தனை நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நெய்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, சாரண மாவட்ட முதன்மை ஆணையரும், என்எல்சி கல்வித் துறைச் செயலருமான இள.நெடுமாறன் தலைமை வகித்தார்.
என்எல்சி கல்வித் துறை முதன்மை மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் சேகர்ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக மாவட்ட அமைப்பாளர் சண்முகம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக என்எல்சி கல்வி, கலாசாரம் மற்றும் சமூக பொறுப்புணர்வுத் துறை தலைமைப் பொது மேலாளர் மோகன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற என்எல்சி நிறுவனத்தின் மனித வளத் துறை செயல் இயக்குநர் முத்து பேசியதாவது:
நிலவில் முதன் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் சாரணராக இருந்தவர். எதற்கும், எப்போதும் தயாராக இருத்தல் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு வான்வெளி பயணத்தை மேற்கொண்டதால் அவருக்கு உலகளாவிய பெருமை கிடைத்தது.
அமெரிக்க அதிபர் கென்னடி, கிளிண்டன், பராக் ஒபாமா, பில்கேட்ஸ் போன்ற உலக பெருமை பெற்றவர்கள்அனைவரும், சாரண இயக்கத்திலிருந்து தங்களது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கியவர்களாவர்.
சாரண இயக்கத்தின் துணையோடு தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிதான் இன்றளவும் போற்றுதலுக்குரிய போட்டியாக உள்ளது. எனவே, மாணவர்கள் சாரண இயக்கத்தில் இணைந்து நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் சேவையாற்ற வேண்டும் என்றார்.
விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சாரண, சாரணீயர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், 500-க்கும் மேற்பட்ட சாரண-சாரணீயர்கள் கலந்துகொண்டனர்.
சாரண பயிற்றுநர் பார்த்திபன் நன்றி கூறினார்.