தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டி தமிழ்ப் பரப்புரை ஊர்திப் பயணம் மேற்கொண்டு வரும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் உலகத் தாய்மொழி நாள் சிறப்புக் கூட்டம் ஆகியவை திராவிடர் கழகம் சார்பில் வடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவர் வெ.ராமானுஜம் தலைமை வகித்தார். மாவட்ட தி.க. செயலர் நா.தாமோதரன், மண்டல மகளிரணிச் செயலர் ரமாபிரபா ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.க. பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன் தாய்மொழியின் சிறப்புகள், உரிமைகள் பற்றியும், தமிழுக்கு தமிழ்நாட்டில் முதன்மை வேண்டி பரப்புரை ஊர்திப் பயணம் மேற்கொண்டு வரும் குழுவினரை வரவேற்றும் சிறப்புரையாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் த.ராசவன்னியன், ஒன்றிய தி.க. செயலர் இரா.குணசேகரன், குறிஞ்சிப்பாடி நகரத் தலைவர் தா.கனகரராசு, அரிமா சங்கத் தலைவர் பிரம்மநாயகம், வர்த்தகர் சங்கத் தலைவர் இரா.ஞானசேகரன், சன்மார்க்க தலைமைச் சங்க நிர்வாகி ராதாகிருட்டிணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமநாதன் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் வா.மு.சேதுராமன் தனது பயண நோக்கத்தை விளக்கி, ஏற்புரையாற்றினார். தி.க. நிர்வாகிகள் இரா.கண்ணன், என்.கனகராஜ், இரா.மாணிக்கவேல், கோ.வேலு, செ.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, வடலூர் நகர தி.க. தலைவர் சு.ராவணன் வரவேற்றார். நகர இளைஞரணித் தலைவர் திராவிட ரவி நன்றி கூறினார்.