பண்ருட்டி அருகே பொலிவிழந்து காணப்பட்ட புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் முன்னாள் மாணவர்களின் முயற்சியால் பொலிவு பெற்றன.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பள்ளி வளாகம், வகுப்பறை, கட்டமைப்பு வசதிகள் போதியளவில் இல்லை. மேலும் கட்டடங்களும் பழுதடைந்து கிடந்தன. எனவே, பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை கட்டடங்களைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்தத் தகவலை அறிந்து களமிறங்கிய பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தங்களது சொந்தப் பணம் ரூ. 20 லட்சம் செலவில், 480 மாணவர்கள் அமர்ந்து படிக்க 120 இருக்கைகள், புதிய நவீன குடிநீர்த் தொட்டி, 13 கட்டடங்கள் கொண்ட பள்ளி வளாகம் முழுவதும் வண்ணம் பூச்சு வேலை, ஆய்வுக் கூடம் புனரமைப்பு, புதிய நூலகம், கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்தனர்.
இதற்கான திறப்பு விழா சனிக்கிழமை (ஜன. 13) பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. பள்ளியின் முன்னாள் மாணவரும், தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவருமான ஜெ.லோகநாதன் தலைமை வகிக்கிறார். ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சி.விஜயக்குமார், முன்னாள் மாணவரும் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளருமான வி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.