கடலூர் நகரில் காவல் துறையினர் வசிக்கும் காவலர் குடியிருப்புகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் புதுநகர், முதுநகர், திருப்பாதிரிபுலியூர், தேவனாம்பட்டினம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பணியாற்றும் காவலர்களின் குடும்பத்தினர் வசிக்கும் காவலர் குடியிருப்புப் பகுதிகளில் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வகையில், கடந்த 3 நாள்களாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, வெள்ளிக்கிழமை புதுநகர் காவலர் குடியிருப்பில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, கோலப் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பங்கேற்று காவலர் குடும்பத்தினருடன் பொங்கலைக் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ஆயுதப்படை வளாகத்தில் ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டி, கயிறு இழுத்தல், குண்டு எறிதல், இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல, எல்கேஜி முதல் 9 -ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ஓட்டப் பந்தயம், உறியடித்தல், ஓவியப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் காவல் உதவிக் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, கூடுதல் கண்காணிப்பாளர் ஆர்.வேதரத்தினம் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். ஆய்வாளர்கள் கி.சரவணன், சிவசங்கரன், பாண்டிச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.