மாட்டுப் பொங்கலையொட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் திருவூடல் நந்தி சிறப்பு அலங்காரத்தில் திங்கள்கிழமை காட்சியளித்தார்.
மாட்டுப் பொங்கலையொட்டி இந்தக் கோயிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர், பூ, பழ வகைகள், காய்கறிகள், பட்சனங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்துக்கு தேவையான பொருள்களை பக்தர்கள் வழங்கினர்.
இந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளைச் செயலர் சி.ராஜேந்திரன், தலைவர் வாசவி கணேசன், துணைத் தலைவர்கள் கே.என்.சி.மோகனகிருஷ்ணன், எஸ்.வி.வைரக்கண்ணு, ஆர்.சந்திரசேகர், பொருளாளர் மதன்சந்த் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோயிலில் தை மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
நந்திதேவர் வெள்ளி கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து வீரட்டானேஸ்வரர், அம்மாள் ரிஷப வாகனத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல, புதுப்பேட்டை, செம்மேடு காசிவிஸ்வநாதர் கோயில், பண்ருட்டி சோமேஸ்வரர், குணபரீஸ்வரர், திருத்துறையூர் சிஷ்டகுருநாதர், வீரப்பெருமாநல்லூர் வியகரபுரீஸ்வரர், திருவாமூர் பசுபதீஸ்வரர், வேகாக்கொல்லை களப்பாலீஸ்வரர், பேர்பெரியான்குப்பம் அனந்தபுரீஸ்வரர் ஆகிய கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.