கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்வோர் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் பி.கற்பனைச்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகம்மதுஅலி, மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், அனைத்துச் சமய நிறுவன நிலங்களில் குடியிருந்து வருபவர்கள், சாகுபடி செய்பவர்களுக்கு அந்த இடங்களுக்கான விலையை அரசே தீர்மானித்து அதை தவணை அடிப்படையில் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவரவருக்கு வழங்க வேண்டும். மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்கள் குடியிருக்கும் இடங்களுக்கான தொகையை அரசே செலுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவைக் காட்டி இந்து சமய அறநிலையத் துறை மடத்துக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களையும், சாகுபடி செய்யும் விவசாயிகளையும் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பலமடங்கு உயர்த்தப்பட்ட வாடகை, குத்தகை தொகையை முன் தேதியிட்டு வசூல் செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
நிர்வாகி எம்.பழனி நன்றி கூறினார்.