பண்ருட்டி, நெல்லிக்குப்பம் குறுவட்ட அளவில் புதன்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ள சொட்டுநீர்ப் பாசன சிறப்பு முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயனடைய வேண்டும் என அண்ணாகிராமம் வேளாண் உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணாகிராமம் வட்டாரத்தில் சொட்டுநீர்ப் பாசன முறையை அதிகப் பரப்பளவில் அமைக்க பிரதமர் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நெல்லிக்குப்பம் குறுவட்ட அளவில் திருக்கண்டேஸ்வரம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்திலும், பண்ருட்டி குறுவட்ட கிராமங்களுக்கு சின்னப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளன.
வருவாய்த் துறையினருடன் இணைந்து நடத்தும் இந்த முகாமை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், முகாமில் பங்கேற்க வரும் விவசாயிகள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், பத்திர நகல் ஆகியவற்றைக் கொண்டு வந்து, சொட்டுநீர் பாசன திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.