சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக கல்விச் சேவையை அளித்து வருகிறது. இதையொட்டி, மாணவர்களை மேம்படுத்தும் விதமாக துறைத் தலைவர் சி.சமுத்திரராஜகுமார் 40 நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார். அதில் ஒரு நிகழ்வாக ராகிங் எதிர்ப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கம் மேலாண்மைத் துறை வளாகத்தில் நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்தை பதிவாளர் கே.ஆறுமுகம் தொடக்கி வைத்தார். துறைத் தலைவர் சி.சமுத்திரராஜகுமார் தலைமை வகித்தார். கணினித் துறைத் தலைவர் வி.சீனிவாசன் வாழ்த்துரையாற்றினார். பி.ஜெயக்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியை பேராசிரியர்கள் பி.ஜெயக்குமார், கே.அய்யப்பராஜா, உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் எம். அன்பரசன், செல்வி சுமிதா, சி.மணிகண்டன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, "ராகிங்கில் ஈடுபட மாட்டோம்' என விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டனர். ராகிங்கை தடுப்பதாக 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் கையெழுத்திட்டனர்.