விருத்தாசலம் அருகே குடிநீர் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடியேற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்போருக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 2 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து மின்மோட்டார் மூலமாக 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
மேலும், சிறிய அளவிலான 3 தொட்டிகளிலும் குடிநீர் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டதாம்.
இந்த நிலையில், ஒரு மின்மோட்டார் பழுதானதால் கடந்த 6 மாதங்களாக ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலமாக மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்ததாம். கடந்த சில நாள்களாக அந்தத் தொட்டியிலிருந்து வரும் தண்ணீர் பயன்படுத்த முடியாதபடி கலங்கலாக உள்ளதாம். இதனால், கிராம மக்கள் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனராம்.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்ததோடு, கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை இந்த கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், காலிக் குடங்களுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.