திருக்கோவிலூர் அருகே மலைக்கிராம பெண்கள் போலீஸாரால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான வழக்கு தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தினர் கடலூரில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ளது டி.மண்டபம் மலைக்கிராமம்.
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் வசிக்கும் இருளர் வகுப்பைச் சேர்ந்த 8 ஆண்களை திருட்டு வழக்கு விசாரணைக்காக திருக்கோவிலூர் போலீஸார் அழைத்துச் சென்றனராம்.
பின்னர், காவல் ஆய்வாளர் சீனுவாசன் தலைமையிலான 3 காவலர்கள் இரவில் கிராமத்துக்குள் புகுந்து, அங்கிருந்த பெண்களிடம் பேசினராம்.
அதில், காவல் நிலையத்தில் இருப்பவர்களை விடுவிப்பதாகக் கூறி பெண்கள் சிலரை பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில் இந்தப் பிரச்னையில் மாநில மனித உரிமை ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் வெள்ளிக்கிழமை கடலூர் வந்தார்.
அவர் பாதிக்கப்பட்ட 4 பெண்களிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, அவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.
இதேபோல சுமார் 30 வழக்குகள் தொடர்பான விசாரணையையும் நீதிபதி மேற்கொண்டார்.
அப்போது, வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், இருதரப்பினரது வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.
இதனால், விசாரணை நடைபெற்ற கடலூர் சுற்றுலா மாளிகையில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.