கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை உதவி மின் துறை அலுவலகத்தில் வணிக உதவியாளராகப் பணிபுரிபவர் தமிழினியன் (45).
இவரிடம், வீராணம் ஏரிக்கரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன், தனது பெட்டிக் கடைக்கு மின் இணைப்பு கோரி, 2017-ஆம் ஆண்டு மனு அளித்தாராம். இதுதொடர்பாக ஓராண்டாக பலமுறை மின் துறை அலுவலகத்துக்கு அலைந்துள்ளார்.
இந்த நிலையில், மின் இணைப்பு வழங்க தமிழினியன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து இளஞ்செழியன் கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ. 5 ஆயிரத்தை இளஞ்செழியனிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கொடுத்தனுப்பினர். அந்த பணத்தை வணிக உதவியாளர் தமிழினியனிடம் அவரது அலுவலகத்தில் வைத்து இளஞ்செழியன் வெள்ளிக்கிழமை கொடுத்தார். அப்போது, தமிழினியனை அங்கு டி.எஸ்.பி. மெர்லின்ராஜாசிங் தலைமையில் வாடிக்கையாளர்கள் போல மாற்று உடையிலிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சதீஷ், சண்முகம் ஆகியோர் கைது செய்தனர்.