பண்ருட்டி அருகே அரசு அரசுப் பேருந்து என்ஜினில் திடீரென புகை கிளம்பியதால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பண்ருட்டி பணிமனைக்குச் சொந்தமான நகரப் பேருந்து (வழித்தடம் எண் ஆர்.25) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் காட்டுக்கூடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி புறப்பட்டது. பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பேருந்து வந்தபோது, அதன் என்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். அதற்குள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்து அவசர, அவசரமாக கீழே இறங்கினர். பின்னர் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.